| ADDED : ஜூன் 17, 2024 01:49 AM
ஓசூர்: சூளகிரி அருகே சின்னபேட்டகானப்பள்ளி, பெல்லட்டி மற்றும் உத்தனப்பள்ளி, ஓபேபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை உடைத்து, அதிலிருந்த ஆயில் மற்றும் 109 கிலோ காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அடுத்தடுத்து நடந்த இச்சம்பவம் குறித்து, மின்வாரியம் சார்பில் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைத்து போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர்.இதில், ஓசூர் சானசந்திரம் கடவுள் நகரை சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் கெலமங்கலம் அடுத்த போடிச்சிப்பள்ளி அருகே டி.கொத்தப்பள்ளியை சேர்ந்த முத்து, 27, கெலமங்கலம் ஜி.பி.,யை சேர்ந்த குபேந்திரன், 21, ஆகிய, 3 பேர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார், 109 கிலோ காப்பர் கம்பிகள் மற்றும் 30,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.