| ADDED : ஜூன் 27, 2024 03:47 AM
ஓசூர்: சூளகிரி அருகே, 11 மாத பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர்கள் வடிவேல் - சுமித்ரா தம்பதி; கூலித்தொழிலாளர்கள்; இவர்களுக்கு, 3 வயதில் கயல்விழி என்ற பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான சுமித்ராவிற்கு கடந்த, 11 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மோசிதா என பெயர் வைத்து வளர்த்து வந்தனர். இக்குழந்தைக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீராத காய்ச்சல் இருந்ததால், ஓசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த, 24 ல் வீட்டில், குழந்தை மோசிதா, சோபாவிலிருந்து தவறி கீழே விழுந்தாள். அதன் பின் குழந்தைக்கு, தொடர்ந்து வாந்தி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி குழந்தை சுயநினைவை இழந்ததால், சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, பெற்றோர் குழந்தையை கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், குழந்தை மோசிதா இறந்து விட்டதாக தெரிவித்தார்.குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை அறிய, சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவ அலுவலர் பூபதி புகார் படி, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.