| ADDED : ஜூன் 07, 2024 07:49 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஆனந்த் நகரை சேர்ந்தவர் நவீன்குமார், 34, தனியார் நிறுவன ஊழியர். இவரது, 'வாட்ஸாப்' எண்ணிற்கு கடந்த, ஏப்., 23ல் ஒரு செய்தி வந்தது. அதில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, அதற்கான இணைப்பு ஒன்றையும் அனுப்பி இருந்தனர். அதை நம்பி சிறிதளவு முதலீடு செய்த நவீன்குமாரின் வங்கி கணக்கிற்கு, லாபத்துடன் முதலீட்டு தொகை வந்தது. இதையடுத்து தன்னிடம் இருந்த, 10 லட்சத்து, 64 ஆயிரம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக அனுப்பினார்.அவர் முதலீடு செய்த தொகை, அதிக லாபத்துடன் இணையதள பக்கத்தில் தெரிந்த போதிலும், அவரால் பணத்தை எடுக்கமுடியவில்லை. அதற்கான முயற்சியில் அவர் இறங்கிய போது, அந்த இணையதள பக்கமும் முடங்கியது.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நவீன்குமார், இது குறித்து, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்; போலீசார் விசாரிக்கின்றனர்.