| ADDED : மே 28, 2024 09:01 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மருத்துவ அவசர சிகிச்சை மையம் அமைக்கவுள்ள கட்டட வளாகத்தை, மாவட்ட கலெக்டர் சரயு, ஆய்வு செய்த பின் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாலையோரம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வயதான மற்றும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர்களை கண்டறிந்து, அவர்களை மீட்டு உணவு மற்றும் முதலுதவி அளித்து, தொடர் சிகிச்சை மேற்கொள்ள, கிருஷ்ணகிரி நகராட்சியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், தனி வார்டு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக தலா, 10 படுக்கைகள் வசதிகள் அமைக்கப்பட உள்ளன. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலிருந்து, ஒரு மன நல மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் சிகிச்சை மேற்கொள்வார்கள். சிசிக்சையின் போது அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங், மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளன. நன்கு தேறியவர்களை, அவர்கள் சரியான முகவரி அளிக்கும் பட்சத்தில், அவர்களை குடும்பத்தாரிடம் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மது, கண் மருத்துவர் கிருபாவதி மற்றும் மருத்துவர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.