மாரியம்மன் கோவில் திருவிழா 1,200 பேர் மாவிளக்கு ஊர்வலம்
கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, 1,200க்கும் மேற்பட்டோர் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, காலையில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.கிராமத்தில் இருந்து, 1,200க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக, மேம்பாலம் வரை கொண்டு சென்று, கோவிலுக்கு திரும்பினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் அம்மன் வேடம் அணிந்தும், அலகு குத்தியும், 200க்கும் மேற்பட்டோர் தீச்சட்டி ஏந்தியும் வேண்டுதல் நிறைவேற்றினர். கோவிலில் அம்மனுக்கு, மாவிளக்கு படைத்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடு, கோழி பலியிட்டு, கோவில் முன் கிலோ கணக்கில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டனர்.ஏற்பாடுகளை கிட்டம்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர். கோவில் திருவிழாவையொட்டி இன்று பகல், 2:00 மணிக்கு, எருதுகட்டு விழா நடக்க உள்ளது.