கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த ஒரப்பம் கிராமத்தில், 700 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த உற்சவ விழா கடந்த, 3ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவை, பெரிய ஒரப்பம், சின்ன ஒரப்பம், நாகம்பட்டி, பெரிய சுண்டம்பட்டி, சின்ன சுண்டம்பட்டி ஆகிய, 5 கிராம மக்கள் இணைந்து நடத்துகின்றனர். இதில், தர்மபுரி மாவட்டம் ஓம் சத்தி நாடக சபா குழுவினரின் சார்பில், மஹாபாரத சொற்பொழிவும், பாஞ்சாலி திருக்கல்யாணம், அர்சுணன் தபசு நாடகம், அரவாண் கடபலி உள்ளிட்ட இதிகாச நாடகங்கள் நடந்து வந்தன.கடந்த, 18 நாட்களாக நடந்து வந்த இவ்விழாவின் நிறைவு நாளான நேற்று, துரியேதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவில் அருகில், 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் செய்து, அங்கு துரியோதனன், பீமன் வேடம் அணிந்த நாடக கலைஞர்கள் சண்டையிட்டு, துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியை நடித்துக் காட்டினர். பின்னர், திரவுபதி அம்மன் கூந்தல் முடித்ததையடுத்து, துடப்பத்தினால் ஆண்களும், பெண்களும் தலையில் அடிவாங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.