ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர்
கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலத்திலிருந்து, பர்கூர் அருகே ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திர, கர்நாடக மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.அம்மாநில வனப்பகுதிகளிலிருந்து அவ்வப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கிராமங்களில் யானை கூட்டம் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.இந்நிலையில், ஆந்திர மாநிலம், நந்திபேண்டா காப்புக்காட்டிலிருந்து பிரிந்த ஒரு யானைக்கூட்டம், நேரலக்கோட்டை, திருப்பத்துார் மாவட்டம் வழியாக பர்கூர் அடுத்த ஜிகினிக்கொல்லை பகுதிக்குள் புகுந்துள்ளது.இப்பகுதியானது மலையடிவாரத்தில், பல நுாறு ஏக்கரில் மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள பகுதி. நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு சென்ற விவசாயிகள், யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்தனர். அதில் ஒரு யானை பிரிந்து ஊருக்குள் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுவதும் தெரிந்தது.கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது ஜிகினிகொல்லையில் ஒற்றையானை ஒன்றும் ஒப்பதவாடி அருகே, 5 யானைகள் உட்பட, 6 யானைகள் சுற்றித்திரிந்தது தெரிந்தது.அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பர்கூர் அடுத்த ஜிகினி கொல்லை, ஒப்பதவாடி, மேல்பணம், அத்திமரத்துபள்ளம், மல்லப்பாடி உட்பட, 10 கிராம மக்கள் இரவில் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என எச்சரித்துள்ளனர்.