உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போஸ்ட் ஆபீசில் இட நெருக்கடியால் மக்கள் அவதி

போஸ்ட் ஆபீசில் இட நெருக்கடியால் மக்கள் அவதி

ஓசூர், ஓசூர், எம்.ஜி., ரோட்டில் தபால் அலுவலகம் இயங்குகிறது. இங்கு, 10,000 பேருக்கு மேல், சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இது தவிர விரைவு தபால், பதிவு தபால், சேமிப்பு திட்டம், ஆதார் அப்டேட், பல்வேறு அரசு திட்டங்கள் மூலமாக வங்கிக்கு வரும் உதவித்தொகையை பெறுவது மற்றும் டிபாசிட் செய்வது, பணம் எடுப்பது போன்ற பல்வேறு தேவைகளுக்காக தினமும், 1,300 வாடிக்கையாளர்களுக்கு மேல், தபால் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்த தினமும், பதிவு தபால்கள் மற்றும் இதர தபால்கள் என தினமும், 8,000 முதல், 10,000 தபால்கள், ஓசூர் தபால் அலுவலகத்திற்கு வருகின்றன.அவற்றை சம்பந்தப்பட்ட அரசு, தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள், பள்ளி, கல்லுாரிகள், வங்கிகளுக்கு வழங்க, 23 ஆண், பெண் போஸ்ட்மாஸ்டர்கள் பணியாற்றுகின்றனர். தபால் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு கூட சிரமமாக உள்ளது. 15 முதல், 20 பேர் அமரும் வகையில் தான இட வசதி உள்ளது. மீதமுள்ள வாடிக்கையாளர்கள் நின்று கொண்டே இருக்க வேண்டியுள்ளது. தபால் அலுவலக கணக்குகளில் டிபாசிட் செய்யும் பணத்திற்கு, வங்கிகளை விட கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. அதனால், ஓய்வு பெற்ற ஊழியர்கள் அதிகளவில் பணத்தை டிபாசிட் செய்கின்றனர்.போதிய வசதி இல்லாததால், மூத்த குடிமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். தபால் அலுவலகத்தில் பார்க்கிங் வசதி இல்லை. அதனால், எம்.ஜி., சாலையில் தான் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த வேண்டியுள்ளது. சொந்த கட்டடம் என்பதால், இடமாற்றம் செய்யவும் தபால் அலுவலக உயர் அதிகாரிகளுக்கு மனம் வரவில்லை. பழைய கட்டடத்தை இடித்து விட்டு, அல்லது மறு சீரமைப்பு செய்து, இட வசதி செய்யவும் முன்வரவில்லை. அதனால், வாடிக்கையாளர்கள் தினமும் அவதியடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை