கரடு முரடான மலைப்பாதையில் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வரும் மாணவ, மாணவியர்
தளி :தளி ஒன்றியத்தில், 600 மீட்டர் மோசமான மலைவழிப்பாதையில் நடந்து சென்று, மாணவ, மாணவியர் கல்வி கற்க வேண்டியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், டி.சூளகுண்டா கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இங்கு, டி.சூளகுண்டா, மஞ்சுகிரி, பேலாளம், நந்திமங்கலம் பகுதியை சேர்ந்த, 83 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மலை கிராம மாணவ, மாணவியரின் பள்ளி இடைநிற்றலை தடுக்கவும், உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கிலும், இப்பள்ளி செயல்படுகிறது.மொத்தம், 4 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். ஜவளகிரி - அஞ்செட்டி சாலையிலிருந்து பிரிந்து, 600 மீட்டர் துாரம், உள்ளே சென்றால் தான், பள்ளியை அடைய முடியும்.இருபுறமும் வனம் சூழ்ந்த நிலையில், அதன் நடுவே உள்ள கற்கள் நிறைந்த கரடு, முரடான வழித்தடத்தில் தான் மாணவ, மாணவியர் தினமும் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர்.ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் வாகனங்களில் செல்வதற்கு கூட இப்பாதை உகந்ததாக இல்லை. அதிகாரிகள் யார் வந்தாலும், இப்பள்ளிக்கு குறிப்பிட்ட துாரம் நடந்து தான் செல்ல முடியும். இப்படிப்பட்ட நிலையிலும், பள்ளி படிப்பை விடாமல், மாணவ, மாணவியர் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், பள்ளிக்கு செல்லும் சாலையை அமைத்து கொடுக்க அதிகாரிகளுக்கு மனம் வரவில்லை.தினமும் அச்சத்துடன் பள்ளிக்கு நடந்து சென்று வரும் மாணவ, மாணவியரின் நலன் கருதி இப்பள்ளிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.