| ADDED : ஜூன் 25, 2024 06:19 AM
மதுரை : மதுரையில் கடந்த வாரம் நடந்த மத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றுத்திறனாளிகளின் செயற்கை கால்களை கழற்ற வைத்தும், ஊன்றுகோல்களை பறித்தும் தேர்வு அதிகாரிகள் அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் நம்புராஜன் பேசியதாவது: ஜூன் 16ல் மதுரை பாலமந்திரம் பள்ளியில் நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில் 14 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.ஊன்றுகோல், செயற்கை கால், வீல்சேருடன் வந்தவர்களை அனுமதிக்க மறுத்தனர். பெண் மாற்றுத்திறனாளியின் செயற்கை கால்களை கழற்ற வைத்த நிலையில் அவர் தவழ்ந்தே தேர்வறைக்கு சென்றார்.தேர்வெழுத வந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 2 வழக்கறிஞர்களில் ஒருவர் முதுகுத்தண்டு வடம் பாதித்தவர், ஊன்றுகோல் இல்லாமல் வரமுடியாத நிலையில் அதையும் பறித்தனர். அது எங்கள் உடல் உறுப்பு போன்றது. அது இல்லாமல் செயல்பட முடியாது. தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்துள்ளோம் என்றார். மாவட்ட நிர்வாகிகள் வீரமணி, தவமணி, பாலமுருகன், முருகன், குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.