உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை வண்டியூர் கண்மாய் பூங்காவில் வணிக கட்டடத்திற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை வண்டியூர் கண்மாய் பூங்காவில் வணிக கட்டடத்திற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய்க்கரையிலுள்ள சுந்தரம் பூங்காவில் உணவு அரங்குகளுக்கான கட்டுமான பணிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. மதுரை கே.கே.நகர் பொழிலன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை கே.கே.நகர் வண்டியூர் கண்மாய்க்கரையில் சுந்தரம் பூங்கா உள்ளது. மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. கண்மாயை அழகுபடுத்த தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை ரூ.50 கோடி ஒதுக்கியது.தற்போது பூங்காவில் வணிக நோக்கில் 40 உணவு அரங்குகளுக்கான கட்டுமான பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. உணவு அரங்குகளை பயன்படுத்துவோர் உணவு, பிளாஸ்டிக் கழிவுகளை விட்டுச்செல்வர். கண்மாய் மாசுபடும். உணவு அரங்குகளுக்கான கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: கண்மாயை அழகுபடுத்த அரசு அனுமதித்துள்ளது. அதை மாற்றி மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர உணவு அரங்குகளுக்கான கட்டுமான பணியை துவக்கியுள்ளது. கண்மாய் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது. கண்மாயின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் வகையில் மட்டுமே மேம்பாட்டு பணியை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய கட்டுமான பணியால் கண்மாயின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். கட்டுமான பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !