உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாய், தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவர்கள்

தாய், தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவர்கள்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தாய், சிவகங்கையில் தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வை எழுதிய மாணர்கள் மாலையில் இறுதிச்சடங்குகளை மேற்கொண்டது அப்பகுதிகளில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. வள்ளியூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி. இவர்களுக்கு சுனில்குமார் 17, என்ற பிளஸ் 2 பயிலும் மகனும், யுவாசினி 14, என்ற 9ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். ஆறாண்டுகளுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டார். சுபலட்சுமி குழந்தைகளை வளர்த்து வந்தார். சமீப காலமாக அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பாதிப்பு அதிகரித்த நிலையில் 15 நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார்.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு உடல்நிலை மோசமடைந்து இறந்தார். மகன் சுனில்குமார் வள்ளியூர் கன்கார்டியா பள்ளியில் பிளஸ் -2 படித்து வருகிறார். நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியதால் தாய் இறந்த சோகத்திலும் தேர்வுக்கு சென்றார். அவரது தாயார் இறந்த தகவலை அறிந்த சக மாணவர்களும் அவரை அரவணைத்து சென்றனர். காலையில் தமிழ் தேர்வை எழுதிவிட்டு மதியம் வீடு வந்தார். அவருடன் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் வந்தனர். பிறகு தாயின் இறுதிச் சடங்குகளை சுனில்குமார் செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.சிவகங்கை ராம்நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தர்மலிங்கம் 53. அவரது மகன் செந்தில்வேலன் மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 உயிரிகணிதம் பிரிவில் படித்து வருகிறார். நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கிய நிலையில், அதிகாலை 5:00 மணிக்கு தர்மலிங்கம் உடல் நலக்குறைவால் இறந்தார்.தந்தை இறந்த சோகத்திலும் அவரது ஆசையை நிறைவேற்ற செந்தில்வேலன் பள்ளிக்கு சென்று பொதுத்தேர்வு எழுதினார். தேர்வு முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்தார். -நமது நிருபர்கள்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி