உலகளவில் முடங்கிய எக்ஸ் சமூக வலைதளம்
புதுடில்லி: டுவிட்டர் என்று முன்பு அழைக்கப்பட்ட 'எக்ஸ்' சமூக வலைதளம் நேற்று உலகளவில் பயனர்கள் பயன்படுத்த முடியாத படி முடங்கியது.அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் சமூக வலைதளம் நேற்று மாலை அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முடங்கியது. பயனர்கள் கருத்து, படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற முடியாமல் சிக்கலை சந்தித்தனர்.இணைய நிறுவனங்கள் முடக்கத்தை பதிவு செய்ய பயன்படும் 'டவுன்டிடெக்டர்' தளத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பயனர்கள் 'எக்ஸ்' சமூக வலைதளம் முடங்கியதாக புகாரளித்தனர். நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு முதலில் எக்ஸ் தளத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டதாக கூறியிருந்தனர். சில மணி நேரங்கள் கழித்து சீரடைந்த சேவை, இரவு 7:30 மணியளவில் மீண்டும் பாதிக்கப்பட்டது. பின் அது 11:00 மணியளவில் இயல்பாக இயங்க துவங்கியது.