நடை அடைத்த பின் தரிசனம் 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்
தொண்டாமுத்தூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைத்த பின், எஸ்.பி., சுவாமி தரிசனம் செய்ததாக எழுந்த புகாரில், அர்ச்சகர் மற்றும் கோவில் ஊழியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நான்கு நாட்களுக்கு முன், இரவு, கோயில் நடை அடைக்கும் நேரத்தில், பழநி பட்டாலியன் எஸ்.பி., பாண்டியராஜன் சுவாமி தரிசனம் செய்து சென்றார். இச்சம்பவத்தை அங் கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலை தளங்களில் பதிவிட்டார். ஆகமவிதியை மீறி, எஸ்.பி.,யை சுவாமி தரிசனம் செய்ய வைத்த கோயில் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிவனடியார்கள், கலெக்டர் அலுவலகத்திலும், ஹிந்து முன்னணியினர், அற நிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். இந்நிலையில், நிர்வாக அனுமதியின்றி தன்னிச்சையாக, எஸ்.பி.,யை சுவாமி தரிசனம் செய்ய வைத்த கோயில் பணியாளர் வேல்முருகன் மற்றும் அர்ச்சகர் சாமிநாதன் ஆகிய இருவரையும், சஸ்பெண்ட் செய்து, பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தக்கார் செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டார்.