| ADDED : ஜன 28, 2024 07:04 AM
மதுரை : மதுரை உட்பட தென்மாவட்டங்களில் நியோ மேக்ஸ் மோசடி நிதி நிறுவனத்தின் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் இருவர் 600 பேரிடம் ரூ.105 கோடி வசூலித்து மோசடி செய்ததாக கைது செய்யப் பட்டனர்.மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் ரூ.பல கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது. இதன் இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உட்பட 25 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இருவர் சரணடைந்தனர்.17 நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டு ரூ.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் மோசடி நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரான்ஸ்கோ பிராப்பர்ட்டிஸ் பி.லிட்., நிறுவனத்தின் இயக்குநர் சிவகங்கை மாவட்டம் தாமறாக்கியை சேர்ந்த அசோக்மேத்தாவை 42, டி.எஸ்.பி., மணீஷா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர் 400 பேரிடம் ரூ.60 கோடி வரை மோசடி செய்துள்ளார். அதேபோல் டிரைடாஸ் பிராப்பர்ட்டிஸ் பி.லிட்., நிறுவனத்தின் இயக்குநர் மதிவாணனையும் 40, போலீசார் கைது செய்தனர். இவர் 200 பேரிடம் ரூ.45 கோடி மோசடி செய்துள்ளார்.