சுடுநீரில் விழுந்து 7 மாத குழந்தை மரணம்
மதுரை: மதுரை, மாடக்குளத்தை சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஏழு மாத பெண் குழந்தை இருந்தது. சேதுபதி, பரமக்குடி தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அக்., 27ல் வீட்டின் கட்டிலில் குழந்தையை துாங்க வைத்துவிட்டு, குளிப்பதற்காக அருகில் உள்ள 'பிளக் பாயின்டில்' வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சுட வைத்துவிட்டு விஜயலட்சுமி, சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை திரும்பி படுத்தபோது கட்டிலில் இருந்து தவறி சுடுநீர் வாளியில் குப்புற விழுந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த விஜயலட்சுமி, உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். தலை முதல் மார்பு வரை காயம்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்த குழந்தை நேற்று இறந்தது. எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.