அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மீண்டும் தி.மு.க.,வில் வாய்ப்பு ஸ்டாலின் மதுரை வருகையில் ‛கிரீன் சிக்னல் கிடைக்கும் என எதிர்பார்ப்பு
மதுரை: தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள் தங்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இன்று (மே 31) மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின், பொதுக்குழு கூட்டத்தை முடித்த பின் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மத்திய அமைச்சராக இருந்து தென் மாவட்ட தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அழகிரி, கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 2014ல் நீக்கப்பட்டார். அவருடன் அவருக்கு நெருங்கிய ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இவர்கள் வேறுகட்சிக்கு செல்லாமல் தி.மு.க.,வில் அழகிரி விசுவாசிகளாகவே உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன் மன்னன், இசக்கிமுத்து உட்பட முக்கிய ஆதரவாளர்கள் தங்களை மீண்டும் கட்சியில் சேர்க்க கோரி கட்சி தலைமைக்கு மன்னிப்பு கடிதம் அளித்தனர். அதில் முதல்வர் ஸ்டாலினுக்கு விசுவாசமாக இருப்போம் என உறுதியளித்தனர்.இதுகுறித்து அழகிரி ஆதரவாளர்களின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அழகிரி - ஸ்டாலின் இடையே சமாதானம் ஏற்பட்டு இரண்டு முறை நேரிலும் சந்தித்துவிட்டனர். மதுரையில் முன்னாள் மேயர் முத்து சிலை திறப்பு குறித்து வீடியோ வெளியிட்ட அழகிரி, அதில் என் தம்பி முதல்வர் ஸ்டாலின் என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இன்று மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின் அழகிரியை அவரது வீட்டில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அப்போது எங்கள் நிலை குறித்து ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி, கட்சியில் சேர்க்கும் முயற்சியை அழகிரி மேற்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, பொதுக்குழுக் கூட்டத்திற்கு பின் மகிழ்ச்சியான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார். பொதுக்குழுவில் அழகிரி பங்கேற்பா
இன்று முதல்வர் சந்தித்த பின்பு, சமாதானமாகி நாளை மதுரையில் நடக்கும் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அழகிரி பங்கேற்பார் என கட்சியினர் சிலர் தெரிவித்தனர். ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, இன்னும் சேர்க்கப்படவே இல்லை. இந்த நிலையில் கட்சி உறுப்பினரே இல்லாத அவர் எப்படி பொதுக்குழுவில் பங்கேற்க முடியும்' என்று கேட்டார் சீனியர் நிர்வாகி ஒருவர்.