உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உத்தப்புரம் கோயில் வழிபாடு; உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

உத்தப்புரம் கோயில் வழிபாடு; உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை, : மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உத்தப்புரத்தில் கோயிலை பூட்டி வைத்திருக்கக்கூடாது என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.உத்தப்புரம் பாண்டி ஏற்கனவே தாக்கல் செய்த மனு: உத்தப்புரத்தில்முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமானது. 2008 ல் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. கோயிலை வேறொரு சமூகத்தினர் ஆக்கிரமிக்க முயற்சித்து வழிபாட்டு உரிமை கோரினர். இரு சமுதாயத்தினரிடையே 2012ல் அப்போதைய எஸ்.பி., தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. வேறொரு சமூகத்தினரை வழிபட அனுமதிப்பதில் ஆட்சேபனை இல்லை; கோயில் பராமரிப்பு, நிர்வாகம் எப்போதும் போல் ஒரு சமுதாயத்திடம் இருக்கும். இரு தரப்பிலும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறுவது என உடன்பாடு ஏற்பட்டது. திருவிழா 2012 முதல் 2014 வரை நடந்தது.சமாதான உடன்பாட்டை 2015ல் திருவிழாவின்போது சிலர் மீற முயன்றனர். இதனால் அரசு தரப்பில் திருவிழா நிறுத்தப்பட்டது. கோயில் வளாகம் பூட்டப்பட்டது. கோயிலை திறந்து பூஜை, திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.2024 ஜூலை 30 ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: மனுதாரர் மற்றும் கிராம மக்கள் கோயிலில் வழிபட உரிமை உண்டு. கோயிலை பூட்டிவைத்திருக்கக்கூடாது. ஏற்கனவே இருதரப்பிலும் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை தற்போது பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். இதை எதிர்த்து கலெக்டர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.அரசுதரப்புவழக்கறிஞர்: கோயிலில் வழிபாடு நடக்கிறது. இது பொதுவான கோயில். மற்றொரு சமூகத்தினரை வழிபடவிடாமல் தடுக்கின்றனர். திருவிழாவையொட்டி அவர்களிடம் வரி வசூலிக்கவில்லை.பாண்டி தரப்பு வழக்கறிஞர்: மற்றொரு சமூகத்தினரை தடுக்கவில்லை. வழிபடலாம்.நீதிபதிகள்: மற்றொரு சமூகத்தினரிடம் வரி வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து விபரம் பெற்று நாளை (ஏப்.17) தெரிவிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ