உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஏலத்தில் பங்கேற்க நடவடிக்கை பரிசீலிப்பதாக கலெக்டர் உறுதி

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஏலத்தில் பங்கேற்க நடவடிக்கை பரிசீலிப்பதாக கலெக்டர் உறுதி

மதுரை:உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை நடத்தும் கடைகளுக்கான ஏலத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீட்டில் சிறப்பு ஏலம் நடத்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், பல்வேறு துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் மாற்றுத் திறனாளிகள் குறைகள், தீர்வுகாண நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சங்கீதா ஆலோசனை நடத்தினார்.அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்ல சாய்தளம் அமைப்பது அவசியம். அமைக்காத அலுவலகங்கள் குறித்து பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றனர். சில அலுவலகங்கள் பல மாடிகளுடன் செயல்படுகின்றன. அவற்றில் மாடியில் உள்ள அதிகாரியின் அறைக்கு செல்ல வழியில்லை. இதனால் அந்த அலுவலகங்களில் 'லிப்ட்' அமைக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கருத்து தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த கலெக்டர், லிப்ட் அமைப்பது அதிக செலவினமாக உள்ளது. இதுபோன்ற அலுவலகங்களின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு அறையை துவக்க வேண்டும். அதிகாரிகளே அங்கு வந்து குறைகளை கேட்டு பரிசீலிக்க வேண்டும் என்று தீர்வு கூறினார்.

அரசு மருத்துவமனையில்

ஆட்டிஸம், நரம்பியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சான்று பெற வேண்டியுள்ளது. இதற்காக 3 நாட்கள் வரை அலைந்து திரிய வேண்டியுள்ளது என்றபோது, 'மருத்துவமனையில் இதற்கென கழிப்பறை வசதிகளுடன் தனி அறை, அதில் 3 நாட்களுக்கும் டாக்டர் இருக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். பார்வை குறைபாடு மாற்றுத் திறனாளிகள் பஸ்சில் பயணிக்க போக்குவரத்து ஊழியர்கள் உதவ வேண்டும். அவர்கள் பஸ்பாஸ் பெற அலையவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல உள்ளாட்சி அமைப்புகளால் கடைகள் போன்றவை ஏலமிடுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு என 4 சதவீத ஒதுக்கீடு உள்ளது. அதனை மாற்றுத் திறனாளிகள் மட்டுமே பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான டெபாசிட் தொகையில் சலுகை காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை பரிசீலிப்பதாக கலெக்டர் பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி