குன்றத்தில் தீபத்துாணிற்கு மூங்கில் தடுப்பு அமைக்கும் பணி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிச.5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச. 13ல் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. கோயில் சார்பில் ஆண்டு தோறும் மலைமேல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு ஹிந்து அமைப்பினர் கோரிக்கையை வைத்து வருகின்றனர். நேற்று முன் தினம் அதிகாலை ஹிந்து முன்னணியினர் தடையை மீறி தீபத்துாணில் தீபம் ஏற்றினர். வழக்கமாக கோயிலில் திருவிழா கொடியேற்றிய சில நாட்களுக்கு பின்பு தீபத்துாணை சுற்றிலும் மூங்கில் தடுப்பு அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். நேற்று அப்பணி துவங்கியுள்ளது. மலைமேல் 16 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.