முன்னாள் கைதியின் பேத்திக்கு பாலியல் தொந்தரவு பணி நேரத்தில் செருப்படி வாங்கிய உதவி ஜெயிலர் மதுரையில் மீண்டும் சர்ச்சை
மதுரை : மதுரையில் முன்னாள் கைதியின் பேத்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பணி நேரத்தில் உதவி ஜெயிலர் பாலகுருசாமிக்கு செருப்படி விழுந்தது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுரை சிறையில் உதவி ஜெயிலராக இருப்பவர் பாலகுருசாமி. நேற்று மதியம் 12:00 மணியளவில் பணி நேரத்தில் ஆரப்பாளையம் ரோட்டில் 14 வயது சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரிடம் சிறுமியின் சித்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு செருப்பால் அடித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், பாலகுருசாமியை ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர். பின்னணி என்ன
போலீசார் கூறியதாவது: மதுரை சிறையில் இருந்து தண்டனை முடிந்து வெளியே வந்த கைதி ஒருவர், ஆரப்பாளையம் பகுதியில் டிபன் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கு 3 மகள்கள். இரு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இதில் இரண்டாவது மகளின் 14 வயது மகள், தாத்தாவான முன்னாள் கைதியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். டிபன் சென்டருக்கு அடிக்கடி வரும் பாலகுருசாமி, 3வது மகளிடம் தொடர்பில் இருக்க முயற்சித்தார். ஆனால் அப்பெண் சம்மதிக்காததால், சிறுமியிடம் அலைபேசி எண்ணை கொடுத்து தன்னிடம் பேசுமாறு கூறிவிட்டு பாலகுருசாமி சென்றார்.இதுகுறித்து சித்தியிடம் சிறுமி கூறினார். ஆத்திரமுற்ற சித்தி, பாலகுருசாமியை க(த)ண்டிக்க திட்டமிட்டார். நேற்று பணி நேரத்தில் பாலகுருசாமியிடம் சிறுமி அலைபேசியில் பேசினார். அவரை ஆரப்பாளையம் ரோட்டில் ஒரு ஏ.டி.எம்., அருகே வருமாறு பாலகுருசாமி கூறினார். அங்கு சிறுமியை சந்தித்தவர், ரூ.500 கொடுத்து பாலியல்ரீதியாக பேசி கொண்டிருந்தபோது மறைவாக காத்திருந்த சித்தி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செருப்பால் அடித்தார். இதனால் அவ்வழியே சென்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. இவ்வாறு கூறினர். ஏற்கனவே சிக்கியவர்
சில ஆண்டுகளுக்கு முன் மதுரை சிறையில் கைதியை பார்க்க வந்த மனைவியிடம் 'வாக்குறுதி' கொடுத்து அதிகாரி ஒருவரை (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) அறை ஒன்றில் சந்திக்க செய்தனர். அப்போது அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அப்பெண், அங்கிருந்து தப்பி வெளியே ஓடிவந்து, ரோந்து வந்த போலீசாரிடம் புகார் செய்தார். இதுதொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்விவகாரத்தில் பாலகுருசாமியின் பெயரும் இடம்பெற்றது. நேற்றைய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோது ஓய்வு பெற்ற அந்த அதிகாரி அலைபேசியில் தொடர்பு கொண்டு இருதரப்பையும் சமரசம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.சில ஆண்டுகளுக்கு முன் சிறை காவலர்கள் குடியிருப்பில் பழம் விற்க வந்த பெண்ணிற்கும், காவலர் ஒருவரின் மகளுக்கும் பாலகுருசாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. சில அதிகாரிகளின் ஆதரவால் இவர் துறைரீதியான நடவடிக்கையில் இருந்து தப்பி வந்ததாக சிறை காவலர்கள் கூறுகின்றனர்.