ரூ.1 கோடியில் பந்தல்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைப்பு சித்திரை திருவிழாவிற்காக மாநகராட்சி ஜரூர்
மதுரை:ஊ மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மேம்பாலப் பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட பந்தல்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.1 கோடியில் மீண்டும் சீரமைக்கப்படவுள்ளது.நகரில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. பந்தல்குடி கால்வாய் வைகை ஆற்றுடன் இணையும் கோரிப்பாளையம் பகுதியில் 2020 ல் ரூ.3.15 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டது.கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகளுக்காக இக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் செயல்பாட்டை நிறுத்தி சில பகுதிகள் அகற்றப்பட்டன. இதனால் பந்தல்குடி கழிவுநீர் நேரடியாக வைகையாற்றில் கலந்து வருகிறது. இந்நிலையில் ஏப்.29ல் சித்திரை திருவிழா துவங்குகிறது. மே 12 ல் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குகிறார்.இதனால் அப்பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சித்ரா ஆய்வு செய்தார். விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அதற்குமுன் வைகையாற்றில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி முடிவு செய்தது.கமிஷனர் கூறியதாவது: மேம்பால பணிக்காக அகற்றப்பட்டாலும் சித்திரை திருவிழாவிற்காக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.1 கோடி செலவில் அதற்கான சீரமைப்பு பணிகள் துவங்கவுள்ளன. கழிவுநீர் வைகையாற்றில் கலப்பது தவிர்க்கப்படும். குறிப்பாக கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதியில் கழிவுநீர் கலப்பு முழுமையாக தடுக்கப்படும் என்றார்.