தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் பரவசம் திருப்பரங்குன்றத்தில் 2 கி.மீ., துாரம் காத்திருந்து தரிசனம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி, தெய்வானை புறப்பாடாகினர். மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழநி ஆண்டவர் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார்.பழநி ஆண்டவருக்கு 100 லிட்டர் பால், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி உட்பட 16 வகை அபிஷேகங்கள் முடிந்து ராஜ அலங்காரமானது. தீபாராதனைக்கு பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா காலங்களில் சுவாமி, தெய்வானை மட்டும் புறப்பாடாகி ரத வீதிகள், கிரிவீதி உலா நடக்கும். தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, தெய்வானை தனித்தனியாக ரத வீதிகளில் புறப்பாடகினர்.இரண்டு மூலவர்கள் புறப்பாடாவது ஆண்டுக்கு ஒரு முறை தைப்பூசத்தன்று மட்டுமே. பக்தர்கள் பால்குடம், பல்வகை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2 கி.மீ., வரிசையில் நின்று 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 16 கால் மண்டபம் அருகே ராமலிங்க அடிகளார் பக்தர்கள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. அழகர்கோவில்
சோலைமலை முருகன் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிம்மாசனத்தில் புறப்பாடாகி, கோயிலின் உட்பிரகாரத்தில் தீர்த்தவாரி நடந்தது. சஷ்டி மண்டபத்தில் பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பாலமேடு
செம்பட்டி வரம் தரும் ஆதி ஜோதி முருகர் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். சேலம் எடப்பாடி திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை சார்பில் சுவாமிக்கு 108 இயற்கை மூலிகை அபிஷேகம், ஆராதனை நடந்தது. வாடிப்பட்டி
கொண்டையம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் உள்ள ஓம் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.