| ADDED : செப் 28, 2011 01:03 AM
மதுரை : ''இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட மழைநீர்
சேகரிப்பு திட்டம், நிலத்தடி நீர் சேகரிப்புக்கு ஏற்ற திட்டம்'' என,
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைத் தலைவர் சமாதானம்
தெரிவித்தார். மதுரை யாதவர் கல்லூரியில், உலகளவிலான நிலத்தடி நீர்
மேலாண்மை குறித்த மாநாட்டில் அவர் பேசியதாவது: உலகளவில் 2.5 சதவீதம்
மட்டுமே நன்னீர். இதிலும் 40 சதவீதம் மட்டுமே குடிப்பதற்கு
பயன்படுத்துகிறோம். இந்தியாவில் உள்ள நிலங்களின் சாகுபடி பரப்பளவு
உலகளவில் 2.45 சதவீதம், ஆண்டு மழையளவு 4 சதவீதம். ஆனால் மக்கள் தொகை,
உலகளவில் 16 சதவீதம் இருப்பதால் தான் பிரச்னைகள் அதிகமாகின்றன. 1861 முதல்
தற்போது வரை, 0.5 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் மட்டுமே அதிகரித்துள்ளது.
ஆனால், அடுத்த நூற்றாண்டுகளில் 2 முதல் 4 டிகிரி வெப்பநிலை உயரும் அபாயம்
உள்ளது. தவறான நீர் மேலாண்மை தான் இதில் பெரும் பங்கு காரணம். ஒரு டிகிரி
வெப்பநிலை அதிகரித்தாலே கோதுமை விளைச்சல் குறைந்து விடும். வகுப்புகளில்
பாடத்தை படிப்பதோடு நின்றுவிட்டால் வாழ்க்கைக்கு உதவாது. படித்ததை
பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீர் சார்ந்த துறைகள், கல்வி நிறுவனங்கள்
தனித்தனியாக செயல்படுகின்றன. ஒன்றிணைந்தால் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள்
எடுக்க முடியும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மழைநீரை சேகரிக்கும்
திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தை தொடர்ந்தால் நிலத்தடி நீர்
பெருகும், என்றார். விலங்கியல் துறைத் தலைவர் பத்மநாபன் வரவேற்றார். மத்திய
நீராய்ச்சி விஞ்ஞானி (ஓய்வு) தங்கராஜன் கருத்தரங்க நோக்கத்தை விளக்கினார்.
கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் நவநீதகிருஷ்ணன்,
முதன்மை நிர்வாக அலுவலர் சந்திரசேகரன், இயக்குனர் கோபால் முன்னிலை
வகித்தனர். டீன் நவராஜ் நன்றி கூறினார். கருத்தரங்க அமர்வுகளில் அமெரிக்க
பேராசிரியர் விஜய் பிரகாஷ் சிங், பேராசிரியை சதா, மத்திய நிலத்தடி நீர்
ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ரங்கராஜன், ஷகீல் அகமது பேசினர். செப்.,30 வரை
கருத்தரங்கு நடக்கிறது.