அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் இயக்குநர்கள் கைது
மதுரை:மதுரையை தலைமையிடமாக கொண்ட அப்சல் நிதி நிறுவனம், பல நுாறு கோடி ரூபாய் மோசடி வழக்கில் அதன் இயக்குநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிறுவனம் பொதுமக்களிடம் முதலீட்டுத் தொகையை பெற்று வட்டியுடன் திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக 2017ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்சல் நிறுவன நிர்வாகி செந்தில்வேல் இறந்தார்.இந்த மோசடி தொடர்பாக மனுதாரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், 'இனியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும் காரணங்களை ஏற்க முடியாது. இந்த வழக்கை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், அப்சல் நிதி நிறுவன இயக்குநர்களான செந்தில்வேலின் மனைவி உமா, செந்தில்வேலின் சகோதரர் செல்வகுமார் ஆகியோரை தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இருவரையும் ஜூன் 19 வரை 'ரிமாண்ட்' செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.