தி.மு.க., அரசு இயலாமை அரசு உதயகுமார் காட்டம்
மதுரை: ''புதிய டி.ஜி.பி., மதுரை மேயரை இன்னும் தேர்வு செய்ய முடியாத இயலாமை அரசாக தி.மு.க., அரசு உள்ளது'' என அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குவேன் என்று கூறிவிட்டு, தற்போது வாய் திறக்க மறுக்கிறார். புதிய டி.ஜி.பி., ஏன் நியமனம் செய்யவில்லை என தொடர்ந்து பழனிசாமி கேள்வி எழுப்பி வருகிறார். ஒன்றரை மாதம் கழித்து மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் பட்டியல் மூலம் புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய தமிழக அரசு மறுத்துவிட்டது. மதுரைக்கு புதிய மேயர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இப்படி எதுவும் செய்ய முடியாமல் இயலாமை உள்ள அரசாக தி.மு.க., அரசு உள்ளது வடகிழக்கு பருவமழையால் டெல்டா பகுதியில் லட்சக்கணக்கான டன் நெல்மணிகள் மழையால் வீணாகின. தற்போது பருவமழையால் மகசூல் அதிகமாக இருந்தும் அரசு கவலைப்படவில்லை. விவசாயிகள் வயிற்றில் தி.மு.க., அரசு அடித்துவிட்டது. இவ்வாறு கூறினார்.