உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூட்டுறவு கடன் கிடைக்காமல் மேலுார் விவசாயிகள் அவதி

கூட்டுறவு கடன் கிடைக்காமல் மேலுார் விவசாயிகள் அவதி

மேலுார்: மேலுார் தாலுகாவில் சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன், உரம் கிடைக்காததால் குறித்த நேரத்தில் உரமிட முடியாமல் பயிர் வளர்ச்சி பாதிப்பதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.இத்தாலுகாவில் நெல், வாழை, கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர்.இவர்கள் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற சாகுபடி நிலத்தின் சிட்டா, அடங்கல் சான்று கொடுக்க வேண்டும். அதன்பின்பே விவசாயிகளுக்கு உரம், மருந்து, கடன் வழங்குவர். இந்தாண்டு இதுவரை கடன் கொடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.விவசாயி மணி கூறியதாவது: நெல்லுக்கு ரூ. 20 ஆயிரம், வாழைக்கு ரூ. 40 ஆயிரம் பணமும், பயிர் வளர்ச்சிக்காக பொட்டாஷ், யூரியா உள்ளிட்ட உரங்களும் கூட்டுறவு சங்கத்தில் வழங்குவர். பூதமங்கலம், தும்பைபட்டி, கீழையூர் கடன் சங்கங்களில் உரம் இருந்தும், நிதி இல்லாததால் கொடுக்கவில்லை.குறித்த நேரத்தில் உரமிடாவிட்டால் பயிர்களின் வளர்ச்சி குறைவதோடு, மகசூலும் பாதிக்கும். கூட்டுறவு கடன் கிடைக்க கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் சதீஷ் கூறுகையில், ''கூட்டுறவு சங்கத்தில் கடன் வசூலாகும் பணம், கையில் உள்ள நிதியை பொறுத்து கடன் கொடுக்கிறோம் என்றார்.மதுரை மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் வாஞ்சிநாதன் கூறுகையில், ''கடன் நிலுவையில் உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு கடன் கொடுக்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை