சிலை கரைப்பதில் விதிமுறை பின்பற்ற வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, : 'விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நிறுவவும், வழிபாடு நடத்தவும், நீர்நிலைகளில் கரைக்கவும் ஆக.29 வரை போலீசார், ஆர்.டி.ஓ., உள்ளிட்டோர் அனுமதி வழங்க வேண்டும் என மதுரை, திண்டுக்கல்,தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கலாகின. அவற்றை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பு: வழிபாடு செய்வது எனும் அடிப்படை உரிமைக்கு எதிராக அனுமதி அளிக்க மறுக்கின்றனர். அதே பகுதியில் ஒருவருக்கு மட்டும் அனுமதி அளித்து மற்றவர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். பிரச்னை ஏற்படாத வகையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிலைகளை நிறுவி வழிபட தயாராக உள்ளோம். போலீஸ், அதிகாரிகள் தரப்பு: கடைசி நேரத்தில் கோரியதால்,அனுமதிக்கமுடியவில்லை. சிலைகளை நிறுவுவதில் கடந்த காலங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாவது: விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள், பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியவை. மத சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்றவை அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகள். எனினும் மற்ற நபர்களுக்கோ, இயற்கை சூழலுக்கோ தீங்கு விளைவிக்காத வகையில் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் பரிந்துரைப்படி களிமண், இயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டசிலைகளை மட்டுமே நிறுவவும், கரைக்கவும் வேண்டும். மேடையுடன் சேர்த்து சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. மற்ற மதம் சம்பந்தப்பட்ட இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள்அருகே சிலைகள் அமைக்கக்கூடாது. காலை, மாலை தலா 2 மணி நேரம் மட்டுமே ஸ்பீக்கர்களுக்கு அனுமதி. கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட அரசின் உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். சிலைகளை நிறுவுபவர்கள் குறைந்தது ஒரு மாதம் முன்பே அனுமதி பெற வேண்டும். எனவே தாமதமாக கோரப்பட்ட அனுமதிகள் நிராகரிக்கப்படலாம். முந்தைய ஆண்டுகளில் சிலைகளை நிறுவியவர்களுக்கு அனுமதி அளிக்கலாம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம், 'சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதபொருட்களால் தயாரானவை' எனும் சான்று பெற்ற சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி உண்டு. இதனால் நீர்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்படும். சான்று இல்லாத பட்சத்தில் செயற்கை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பொறுப்பானதாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாததாகவும் இருக்க வேண்டும். வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டார்.