உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் தாய், சேய் இறப்பு குறைந்தது எப்படி

மதுரையில் தாய், சேய் இறப்பு குறைந்தது எப்படி

மதுரை : மதுரை மாவட்ட சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் படி 2024 ஏப்., 1 முதல் 2025 மார்ச் 31 வரையான காலகட்டத்தில் தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.2023 - 24 கணக்கெடுப்பின் படி மாவட்டத்தில் 40,321 குழந்தைகள் பிறந்துள்ளனர். சிசு முதல் ஒரு வயதுக்குட்பட்ட 385 சிசுக்கள் இறந்தனர்.இறப்பு விகிதம் 9.5 சதவீதமாக இருந்தது. குழந்தை பெற்ற 16 பெண்கள் 42 நாட்களுக்குள் ரத்தஅழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறந்தனர். 2024 - 25 கணக்கெடுப்பின்படி 36, 399 குழந்தைகள் பிறந்ததில் இறப்பு 298 ஆகவும், இறப்பு விகிதம் 8.1 சதவீதமாகவும் குறைந்தது. இறந்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கை எட்டாக உள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன் கூறியதாவது:கர்ப்பிணிகளின் இறப்பு எதனால் நிகழ்கிறது என்ற காரணிகளை பட்டியலிட்டு அதை தடுக்கும் வழிமுறைகளை கையாள்கிறோம். 'ஹை ரிஸ்க் மதர்' என்ற வகையில் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், இதய பிரச்னை, இளவயது கர்ப்பம், நிறைய குழந்தைகள் பெற்றவர்கள், 40 வயதை கடந்த நிலையில் குழந்தைப்பேறு ஆகியோரின் புள்ளிவிவரங்களை சேகரித்து தொடர்ந்து கண்காணிக்கிறோம்.கர்ப்பகால துவக்கத்திலேயே ரத்தசோகை உள்ளதா என்பதையும் எடை குறைந்த கர்ப்பிணிகளையும் கண்டறிந்து சத்துணவு, சத்து மாத்திரைகள் வழங்குகிறோம். கர்ப்பிணிகளின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தபட்சம் 11 எம்.ஜி., இருக்கும்படி தொடர்ந்து கண்காணிக்கிறோம். இதுபோன்ற தொடர் கவனிப்பு, கண்காணிப்பின் மூலம் பேறுகால இறப்பை குறைக்க முடிந்தது என்றார்.தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ள அதேநேரத்தில் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது குழந்தைப்பேறு எண்ணிக்கையும் 10 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு குழந்தை பெற்றவுடனேயே குடும்பக்கட்டுப்பாடு செய்வதும், அதிகரித்து வரும் மகப்பேறின்மையும் இதற்கு முக்கிய காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை