உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாராயணபுரம் கண்மாயில் படகு சவாரி சுற்றுலா வளர்ச்சித் துறை மூலம் ஏற்பாடுதினமலர் செய்தி எதிரொலி

நாராயணபுரம் கண்மாயில் படகு சவாரி சுற்றுலா வளர்ச்சித் துறை மூலம் ஏற்பாடுதினமலர் செய்தி எதிரொலி

புதூர் : தினமலர் இதழ் செய்தி எதிரொலியால் மதுரை நாராயணபுரம் பெரிய கண்மாயை பாதுகாக்கும் வகையில் முதற்கட்டமாக சுற்றுலாத் துறை மூலம் படகு சவாரி விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இல்லை. மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மீனாட்சி அம்மன், அழகர்கோவில், திருமலைநாயக்கர் மகால் ஆகிய இடங்களுக்கு சென்று வருகின்றனர். மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறையும்போது ஒரு மாதம் இயக்கப்படும் படகு சவாரியில் பலர் காத்திருந்து சுற்றி மகிழ்வர். நாகனாகுளம் ஊராட்சியில் உள்ள நாராயணபுரம் கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இங்கிருந்துதான் நாகனாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கண்மாய் தூர்ந்து போனதால் பல ஆண்டுகள் வறண்டு காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த ஆண்டு இக்கண்மாயை பல அடி ஆழம், அகலத்திற்கு தூர்வாரி தண்ணீர் தேக்கப்பட்டதால் கடல் போல் காட்சியளித்தது. தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அங்கு மரம் நடும் விழாவை அப்போதைய கலெக்டர் துவக்கி வைத்து கூறுகையில், ''கண்மாயை சுற்றி 600 மரக்கன்றுகள் நடப்படும். சுற்றுலா வளர்ச்சித் துறை மூலம் முள்வேளி அமைத்து, சிறுவர்கள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய, நடைமேடை அமைக்கப்படும்,'' என்றார். பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் கண்மாய் அப்பகுதி மக்களின் திறந்தவெளி கழிப்பிடமாகவும், சமூக விரோதிகளின் பாராகவும் மாறியது. இதுபற்றி தினமலர் இதழ் ஜூலை 19ல் படத்துடன் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக சுற்றுலாத் துறை சார்பில் நாராயணபுரம் கண்மாயில் படகு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நான்கு பைபர் படகு மற்றும் ஒரு மரப்படகை கண்மாயில் நிறுத்தி உள்ளனர். விரைவில் படகு சவாரி துவக்கப்படும். இத்துடன் இல்லாமல் கண்மாயை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி