மதுரை ஆதின மடத்தில் நுழைய நித்யானந்தா வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை ஆதின மடத்திற்குள் நுழையக்கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பைசல் செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'இரு தரப்பிலும் கீழமை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சிவில் வழக்கு மூலம் நிவாரணம் தேடிக் கொள்ளலாம்,' என உத்தரவிட்டது. மதுரை ஜெகதலப்பிரதாபன் 2017 ல் தாக்கல் செய்த மனு: மதுரை ஆதினம் மடத்தின் 292 வது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்தார். திருவண்ணாமலை மற்றும் பிடாதியில் தியான பீடம் நடத்திய நித்யானந்தா தன்னை மதுரை ஆதினம் மடத்தின் 293 வது மடாதிபதியாக 2012ல் அறிவித்தார். பின் மடத்திலிருந்து வெளியேறினார். மதுரை ஆதினம் மடம் நிர்வாகத்திற்குள் நித்யானந்தா எவ்விதத்திலும் தலையீடு செய்ய, மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். தனிநீதிபதி, 'மதுரை ஆதினம் மடம் மற்றும் அதற்கு கீழ் உள்ள கோயில்களுக்குள் நித்யானந்தா நுழையக்கூடாது,' என 2018 மார்ச் 5 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நித்யானந்தா மேல்முறையீடு செய்தார். 2018 மே 30 ல் இருநீதிபதிகள் அமர்வு,'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது. நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு நேற்று விசாரித்தது. நித்யானந்தா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆஜராகினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : ஆதினம் மடம் நிர்வாகம், நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்த 2 சிவில் வழக்குகள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அங்கு இருதரப்பிலும் தத்தமது உரிமைகள் தொடர்பாக ஆவணங்கள், ஆதாரங்களை சமர்ப்பித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம். அந்நீதிமன்ற விசாரணையை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த கருத்துக்கள் கட்டுப்படுத்தாது. சுதந்திரமாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.