பிளக்ஸ் பயன்பாட்டிற்கு தடை கோரி வழக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை அணுக உத்தரவு
மதுரை: தமிழகத்தில் பி.வி.சி., பிளக்ஸ் விற்பனை, பயன்பாட்டிற்கு தடை கோரிய வழக்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மனுதாரர் அணுகி நிவாரணம் தேடலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.நாகர்கோவில் உதயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: பி.வி.சி.,(பாலிவினைல் குளோரைடு) மூலம் பிளக்ஸ் தயாரிக்கப்படுகிறது. விழாக்கள், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளின் போது வரவேற்பு பிளக்ஸ் வைக்கப்படுகிறது. பிளக்ஸ்கள் மண்ணில் மக்குவதில்லை. இவற்றை எரிக்கும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படவும் காரணமாகிறது.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய சிலவகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019 ஜன., 1 முதல் தடை விதித்து 2018 ஜூனில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பால் பாக்கெட் உட்பட சிலவகை பயன்பாட்டிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.கர்நாடகா, சத்தீஸ்கரில் பிளக்ஸ் பயன்பாட்டிற்கு தடை உள்ளது. அதுபோல் தமிழகத்தில் பி.வி.சி., பிளக்ஸ் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து, அரசாணை பிறப்பிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவரிடம் மனுதாரர் மனு அளித்து நிவாரணம் தேடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.