உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் கனமழையால் வீணான பெரியாறு குடிநீர்

மதுரையில் கனமழையால் வீணான பெரியாறு குடிநீர்

மதுரை : மதுரையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் பெரியாறு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் வீணானதுடன் தேங்கிய குடிநீரில் சிக்கிய வாகனங்களால் பாதிப்பு ஏற்பட்டது.வடகிழக்கு பருவமழை அக்., 15ல் (நாளை) துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும் சில நாட்களாக மதுரையில் மேகமூட்டத்துடன் துாறலும், லேசான மழையுமாக கழிந்தது.நேற்று முன்தினம் இரவு திடீரென திரண்ட கருமேகங்கள் ௩ மணி நேரமாக கனமழையாக பெய்ததால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோடுகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடியது. இரவு கனமழை பெய்தது. தொடர்ந்து இடியும், மின்னலுமாக விடிய விடிய மழை தொடர்ந்தது.மதுரை தல்லாகுளத்தில் அதிகபட்சம் 121 செ.மீ., கொட்டித் தீர்த்தது. இதனால் நகருக்குள் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள்ளும் புகுந்தது. பழங்காநத்தம் பிரதான சாலையில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருந்தது.இதில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணானது. இப்பகுதியில் திருப்பரங்குன்றம் ரோடு விரிவாக்க பணி நடப்பதால் குழாய் உடைந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். மழை நேரம் என்பதால் இரவு வீணான குடிநீரை நிறுத்தவும் யாரும் இல்லை.வெளியேறிய குடிநீர் அருகில் உள்ள மத்திய கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு மருந்தகம், கார் பார்க்கிங் பகுதிகளில் மழைநீருடன் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. மூன்று ஏக்கர் பரப்பிலான இடத்தில் 4 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. இதில் கூட்டுறவு பண்டக சாலையில் பணிபுரியும் அதிகாரிகள், வாகனங்கள், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கார், லாரி உட்பட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நீரில் சிக்கின. அவற்றை வெளியே எடுக்க முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
அக் 14, 2024 21:40

மதுரை திருமங்கலம் நகராட்சியின் மிகவும் மோசமான வேலைகள் - ஜலஜீவன் திட்டத்தில் ஆங்காகே தெருக்களில் pipeline வேலைகள் நடைபெறுகிறது , ஆங்காங்கே தோண்டப்படும் வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களை சரியாக மூடுவதில்லை - தினமும் ஆங்காகே விபத்துகள் நடைபெறுகிறது . நகராட்சிஊழியர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மேடு பள்ளங்களை சரியாக மூடுவதில்லை . அணைத்து மரணம் மற்றும் விபத்துகளுக்கு நகராட்சியின் கமிஷனர் மற்றும் ஊழியர்கள்தான் பொறுப்புஏற்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை