உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ்காரரை எரித்து கொன்றவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

போலீஸ்காரரை எரித்து கொன்றவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

மதுரை : மதுரையில், போலீஸ்காரர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர், நேற்று போலீசை வெட்டி தப்ப முயன்ற போது, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தனிப்படை போலீஸ்காரர் மலையரசன் 36. இவரது மனைவி பாண்டிச்செல்வி, 33. இரு மகன்கள் உள்ளனர்.இம்மாத துவக்கத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, டூ - வீலரில் மனைவியுடன் மலையரசன் வீடு திரும்பிய போது, மானாமதுரை அருகே விபத்தில் பாண்டிச்செல்வி இறந்தார்.அவரது மருத்துவ ஆவணங்களை வாங்க மார்ச் 18ல் மதுரை வந்த மலையரசன், ரிங் ரோடு ஈச்சனோடை அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஐந்து நாட்கள் விசாரணைக்கு பின், வில்லாபுரம் ஆட்டோ டிரைவர் மூவேந்திரன், 25, என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பணத்திற்காக மலையரசனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரை நேற்று காலை, 7:00 மணிக்கு கொலை நடந்த இடத்திற்கு திருமங்கலம் எஸ்.ஐ., மாரிகண்ணன் தலைமையிலான போலீசார் அழைத்துச்சென்று, கொலை செய்த விதத்தை நடித்துக்காட்டுமாறு கூறினர்.மூவேந்திரன் நடிப்பது போல், திடீரென அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் எஸ்.ஐ., மாரிகண்ணனை இடது கையில் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். பாதுகாப்பு கருதி போலீசார் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில், மூவேந்தரனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தை எஸ்.பி., அரவிந்த் ஆய்வு செய்தார். கொலைக்கு உடந்தையாக இருந்த மூவேந்திரன் கூட்டாளி சிவா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கூடா நட்பு கேடாய் முடிந்தது

மார்ச் 18ல் மதுரை வந்த மலையரசன், வில்லாபுரம் மூவேந்திரனின் காஸ் ஆட்டோவில் சவாரி செய்தார். அப்போது மூவேந்திரனின் நண்பர் சிவா உடன் இருந்தார். போதையில் இருந்த மலையரசன், மனைவி இறப்பு குறித்து அவர்களிடம் உளறினார்.அவருக்கு ஆறுதல் கூறுவது போல பேசி, 'இன்னொரு கட்டிங் போடலாமா' எனக்கேட்க, 'நான்தான் வாங்கித்தருவேன்' என்றும், 'என்னிடம் இல்லாத பணமா? எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்' என, போதையில் கூறியுள்ளார்.ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த மூவேந்திரன் மலையரசனின் ஜிபே கடவுச்சொல்லை தெரிந்துக்கொண்டு, அவர் குடித்து மட்டையானதும், பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துவிட்டு, 80,000 ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். சிவா யாரிடமும் இதை சொல்லாமல் இருக்க, 30,000 ரூபாய் பெற்றுள்ளார் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மார் 25, 2025 10:20

சுட்டது வலிப்பது மாதிரி மூஞ்சியில் ஆக்ஷன் கொடு? இல்லையின்னா இது நாடகம் அப்படின்னு மக்கள் சுளுவா கண்டு பிடித்து விடுவார்கள்.