உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு மருத்துவக் கல்லுாரிகளின் சாதனைகளை சொல்வதற்கு சேவை மட்டும் போதாது: ஆராய்ச்சிக்கு ஆட்கள் தேவை

அரசு மருத்துவக் கல்லுாரிகளின் சாதனைகளை சொல்வதற்கு சேவை மட்டும் போதாது: ஆராய்ச்சிக்கு ஆட்கள் தேவை

மதுரை : அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை துறைகளில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்படும் போது அந்த தரவுகளை சேகரித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இல்லை.தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர்.மருத்துவத் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் அதே நேரத்தில் புதுப்புது நோய்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டால் தமிழக மருத்துவத்துறை குறித்த சாதனைகள் வெளியுலகிற்கு தெரியவரும்.தற்போது வரை அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளோடு சாதனைகள் முடிந்து விடுகின்றன. சிக்கலான நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் நவீன அறுவை சிகிச்சை, கர்ப்பிணிகளின் சுகப்பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை சார்ந்த ஒவ்வொரு நிகழ்வும் புதிய மருத்துவ ரீதியான தகவல்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றையெல்லாம் சேகரித்து தொகுத்து ஆராய்ச்சி செய்வதற்கு போதிய மனிதவளம் இல்லை.

பெயரில் மட்டும்தான் ஆராய்ச்சி

டாக்டர்களைப் பொறுத்தவரை இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு பாடம் நடத்துவது, தேர்வு வைப்பது, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, அறுவை சிகிச்சை செய்வது என நெருக்கடியான சூழ்நிலையில் நேரம் செலவிடப்படுகிறது.இதில் எங்களது சாதனைகளை சேகரித்து வைப்பதற்கு கூட நேரமிருப்பதில்லை என்கின்றனர் அரசு டாக்டர்கள்.அதே நேரத்தில் மத்திய அரசின் ஜிப்மர், எய்ம்ஸ், நிமான்ஸ் போன்ற மருத்துவத்துறை நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கென தனி ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆராய்ச்சி குறித்த விபரங்கள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் ஏதாவது ஒரு அரசு மருத்துவமனையில் சாதனை நடக்கிறது என்றாலும் அவற்றை தொகுப்பதற்கென தனி துணை அமைப்பு இல்லை.தமிழகத்தில் மருத்துவ கல்வி இயக்குநரகம் மற்றும் ஆராய்ச்சி என்று பெயர் மாற்றம் பெற்றாலும் ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம் தரப்படவில்லை.நிறைய மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள் இயங்குகின்றன. அங்கு ஒவ்வொரு நோயாளிகளுக்கு செய்யப்படும் சிக்கலான ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை பிரமிக்க வைக்கும். ஒவ்வொரு துறையிலும் டாக்டர்கள் அறுவை சிகிச்சையின் போது புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு நோயாளிகளை பிழைக்க வைக்கின்றனர். இந்த தரவுகளை சேகரித்து பிற புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும் போது புதிய ஆராய்ச்சி முடிவுகள் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. இதையெல்லாம் தொகுத்து சேகரிப்பதற்கு டாக்டர்களை ஆராய்ச்சிக்கான புள்ளிசேகர தொகுப்பாளர்களாக நியமித்தால் தமிழகம் மருத்துவத் துறையில் இன்னும் பல மைல்கல்லை எட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !