| ADDED : மார் 15, 2024 07:25 AM
மதுரை : ''அறிகுறி இன்றி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது சிறுநீரக நோய். 90 சதவீதம் பேருக்கு இந் நோய் இருப்பது தெரியாது'' என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் தெரிவித்தார்.உலக சிறுநீரக தினத்தை ஒட்டி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில் மதுரை மேற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஹனிப் தாயூப் தலைமை வகித்தார். சிறுநீரகவியல் துறைத்தலைவர் சம்பத்குமார், சிறுநீரகத் துறை தலைவர் ரவிச்சந்திரன், மருத்துவ நிர்வாகி கண்ணன், டாக்டர்கள் பால் வின்சென்ட், ஆண்ட்ரூ தீபக் ராஜிவ், வேணுகோபால் கலந்து கொண்டனர். டாக்டர் சம்பத்குமார் முன்னுரை எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது.டாக்டர் குருசங்கர் பேசியதாவது:90 சதவீதம் பேருக்கு சிறுநீரக நோய் இருப்பது தெரியாது. படிப்படியாக மோசமாகும்போது ரத்தத்தில் கழிவு அதிகம் சேர்ந்து நோயுற்றவர்களாக உணரச்செய்யும். அதிக ரத்தஅழுத்தம், ரத்தசோகை பலவீனமான எலும்புகள், நரம்பு சேதம் போன்ற பிற பிரச்னைகள் உருவாகக்கூடும் என்றார்.