தாம்பரத்தில் இருந்து மானாமதுரை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்
மதுரை: தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நலன் கருதி சென்னை தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.இன்று (அக். 30) மாலை 5:00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06019) நாளை அதிகாலை 3:45 மணிக்கு மானாமதுரை செல்லும். மறுமார்க்கத்தில் தீபாவளி அன்று (அக். 31) காலை 11:45 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06020) இரவு 11:10 மணிக்கு தாம்பரம் செல்லும்.இரு ரயில்களும் செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராமபட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை ஸ்டேஷன்களில் நின்று செல்லும். ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும்.இன்று (அக். 30) மதியம் 3:45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06109) நாளை அதிகாலை 4:40 மணிக்கு நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கத்தில் தீபாவளி அன்று (அக். 31) காலை 8:45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06110) இரவு 9:55 மணிக்கு தாம்பரம் செல்லும்.இரு ரயில்களும் செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், அரியலுார், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். 14 குளிர்சாதன மூன்றடுக்கு எகனாமி படுக்கை வசதிப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியது.