உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மராமத்து பார்த்த கால்வாய் திடீர்னு உடையுது; நொறுங்குது

மராமத்து பார்த்த கால்வாய் திடீர்னு உடையுது; நொறுங்குது

மேலுார்: திருவாதவூரில் சிதிலமடைந்த இலுப்பக்குடி கால்வாயை மராமத்து பார்த்த ஒரு சில நாட் களிலே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து சிலாப்புகள் சிதிலமடைந்ததால் கால்வாயின் தரம் கேள்விக் குறியாகி உள்ளது. கள்ளந்திரி பத்தாவது கால்வாய் வழியாக வரும் தண்ணீரால் மருதூர் கண்மாய் நிரம்பும். இக் கண்மாயில் இருந்து 4ஏ மடை வழியாக இலுப்பகுடி கால்வாயில் செல்லும் தண்ணீரால் பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள், 800 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும். கால்வாயின் இருபுறமும் மரம் முளைத்து சிலாப்புகள் பெயர்ந்து சிதிலமடையவே விவசாயிகள் தொடர்ந்து மனு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து நீர்வளத்துறையினர் ஏற்கனவே இருந்த உடைகல் மற்றும் சிலாப்புகளை கொண்டு மராமத்து பார்த்தனர். தற்போது சிலாப்புகள் மீண்டும் சிதிலமடைந்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன் தரமற்ற முறையில் பெயரளவில் சிலாப் கற்களை பதித்ததால் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து சிலாப் கற்கள் உடைய ஆரம்பித்துள்ளது. இக் கால்வாயில் வேலை பார்த்த கட்டுமான பொருட்கள் கூட அகற்றாத நிலையில் சிலாப்புகள் சிதிலமடைந்துள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகுவதோடு உடைந்த சிலாப் வழியாக பாசனத் தண்ணீரும் வீணாகும் அவலம் நிலவுகிறது. அதனால் மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு தரமான முறையில் மராமத்து பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ