கடல் தாண்டி வசிக்கும் காரைக்குடி மக்களின் பழமை மாறா பயணம்
மேலுார் : மதுரை மாவட்டம் அழகர்கோவில் ஆடித்தேரோட்டத்தில் கலந்து கொள்ள வெளிநாடுகளில் வசிக்கும் காரைக்குடி பகுதியினர் குலதெய்வ வழிபாட்டுக்காக பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டிகளில் பயணித்தனர். காரைக்குடி கே.வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் அழகர் கோவிலில் ஆக.,9ல் நடக்கும் தேரோட்டத்திற்காக ஆக.,5 ல் மாட்டுவண்டியில் புறப்பட்டனர். அவர்களுடன் நுாற்றுக்கும் மேற்பட்ட உறவினர்களையும் மேலுார் வழியாக அழைத்துச் சென்றனர். இன்று ஆக.,7 அழகர் கோவிலை அடைகின்றனர். ஆக.,8ல் முடி காணிக்கை செலுத்தி தீர்த்தமாடுவர். பின்பு கிடாவெட்டி பொங்கல் வைத்து அன்னதானம் வழங்குவர். ஆக.,9 ல் தேர் இழுத்த பின் சொந்த ஊருக்கு திரும்ப உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் செல்வமணி கூறியதாவது: நுாறாண்டுகளுக்கும் மேலான முன்னோர் பாரம்பரியத்தை கடைபிடிக்கவே மாட்டு வண்டி பயணம் மேற்கொள்கிறோம். இவ்வழிபாட்டை இறைவனுக்குச் செய்யும் கடமையாகவும், முன்னோர்களுக்கு செய்யும் மரியாதையாகவும் கருதுகிறோம். இதில் கலந்து கொள்ள சிங்கப்பூர், மலேசியா, குவைத் உட்பட பல வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளோம். இந்தப் பயணத்திற்காக வண்டிகள் தயாரித்து புதிதாக மாடுகள் வாங்கியுள்ளோம். பொருளாதாரம், பழக்க வழக்கங்களில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இப்பயணத்தை விரும்பியே விடாமல் தொடர்கிறோம். இதன் மூலம் பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகரிப்பதுடன், மனது அமைதி பெறுகிறது என்றார்.