கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போதைய நிலை தொடரலாம்
மதுரை: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தடை கோரிய வழக்கில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. சிவகங்கை மாவட்டம் பொன்னடப்பட்டி பொன்மணி பாஸ்கரன் தாக்கல் செய்த மனு: துவரங்குறிச்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பொன்னம்பட்டி பேரூராட்சி சார்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறையின் முன் அனுமதி பெறவில்லை. அருகில் குடியிருப்புகள், பள்ளிகள், விவசாய நிலம் உள்ளன. நிலத்தடி நீர் மாசுபட்டால் விவசாயம், கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படும். சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். கலெக்டர், பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நவ.6 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.