திறக்கப்படாத ஊராட்சி அலுவலகம் ரூ.22.65 லட்சம் வீண்
வாடிப்பட்டி: திருப்பரங்குன்றம் ஒன்றியம் மேலமாத்துார் ஊராட்சி காமாட்சிபுரத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் உள்ளது. இது பழுதடைந்ததால் 2022ல் கண்மாய் கரை பகுதியில் ரூ.22.65 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம் 3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வரவில்லை. மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாகவும், அச்சத்துடன் பழைய அலுவலக கட்டடத்திற்கு சென்று வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலமாத்துார் மகாமணி: பல்வேறு தேவைகளுக்கு ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பழுதடைந்த கட்டடம் அருகே பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளது. எனவே குழந்தைகள், மக்கள், பணியாளர்கள் நலன் கருதி பழுதான கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'அலுவலக கட்டடம் இடம் தொடர்பான பிரச்சனை தீர்வு காணப்பட்டது. மின் இணைப்பு பெற்றவுடன் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்' என்றனர்.