உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கடன் வசூல் தீர்ப்பாயங்கள் நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை என்ன; உயர்நீதிமன்றம் கேள்வி

கடன் வசூல் தீர்ப்பாயங்கள் நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை என்ன; உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: தமிழகத்திலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தென்காசி மாவட்டம் சேந்தமரத்தை சேர்ந்தவர் சேர்மன். இவர் வீடு கட்டுவதற்காக ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கினார். குறித்த நேரத்தில் கடன் தவணையை செலுத்தவில்லை எனக்கூறி வங்கி நிர்வாகம் வீட்டிற்கு ஏல அறிவிப்பு நோட்டீஸ் வெளியிட்டது. அதற்கு தடை கோரி சேர்மன் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.நீதிபதிகள்: சட்டப்படி கடன் வசூல் தீர்ப்பாயத்தில் மனு செய்து நிவாரணம் தேட வேண்டும்.மனுதாரர் தரப்பு: மதுரை கடன் வசூல் தீர்ப்பாயம் (டி.ஆர்.டி.,) நீதிபதி விடுப்பில் சென்றுள்ளார். கோவை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. கேரளா எர்ணாகுளத்திலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தை அணுகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்ல இயலாததால் இந்நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: இதுபோல் பல்வேறு வழக்குகள் தாக்கலாகின்றன. இவ்வழக்கில் மத்திய நிதித்துறை செயலரை இந்நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக இணைத்துக் கொள்கிறது. அவர் தமிழகத்திலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மேற்கொண்ட நடவடிக்கை குறித்து செப்.,10ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கில் மேல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை