உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையின்றி கூலித்தொழிலாளர் வேலையிழப்பு மாற்றுத்தொழிலுக்கு இடம் பெயரும் அவலம்

மழையின்றி கூலித்தொழிலாளர் வேலையிழப்பு மாற்றுத்தொழிலுக்கு இடம் பெயரும் அவலம்

பேரையூ : மழை இன்றி மானாவாரி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் நஷ்டத்தாலும், கூலித் தொழிலாளர்கள் வேலை இன்றியும் சிரமப்படுகின்றனர்.பேரையூர் தாலுகாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி, இறவைப்பாசன நிலங்கள் உள்ளன. மானாவாரி நிலங்கள் மழையை நம்பியும், இறவைப்பாசன கிணறுகள் கண்மாய்களை நம்பியும் உள்ளன. இந்தாண்டு இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு இல்லை.இதனால் 80 சதவீத கண்மாய்களில் நீர்தேங்கவில்லை. மானாவாரி விவசாயம் குறைந்து வருகிறது. சில மாதங்களில் மட்டும் பெய்யும் மழை மானாவாரி விவசாயத்திற்கு பயனின்றி போகிறது. வறட்சியால் தரிசுநிலங்களின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கண்மாய் நீரை பயன்படுத்தி நேரடி பாசனம் செய்ய முடியாமல், நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக அதில் நீரைத்தேக்கி வைக்க வேண்டி உள்ளது.

தொழிலாளர் வேலையிழப்பு

தாலுகாவின் அனைத்து கண்மாய்களிலும் ஒரு முறை முழு அளவில் தண்ணீர் தேங்கினால், 2 ஆண்டுக்கு நிலத்தடி நீராதாரத்திற்கு பிரச்னை இருக்காது. ஆனால் 2 ஆண்டுகளாக மழைப்பொழிவு சரிவர இல்லாமல் நிலத்தடி நீராதாரம் பாதித்து, இறவைப்பாசனமும் கேள்விக்குறியாகி விட்டது. பயன்பாட்டில் உள்ள கிணறுகளை ஆழப்படுத்தியும், துார்வாரியும், ஆழ்குழாய்கள் அமைத்தும் பலனின்றி 40 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பொய்த்துப் போனது. இதனால் சாகுபடி பரப்பு குறைந்து விவசாய கூலிகளுக்கான வேலைவாய்ப்பும் குறைந்தது. வேலையிழந்த பலர் மாற்றுத்தொழில்தேடி நகர்ப்புறம் செல்லும் அவலம் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ