பள்ளி பஸ் மீது கல் வீசி அச்சுறுத்தும் மப்ப ு ஆசாமிகள்
பொறையார்: போதையில் பள்ளி வாகனம் மீது கல்வீசி தாக்கி, குழந்தைகளை அச்சுறுத்திய போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பூவம் பகுதி தனியார் சி.பி.எஸ்.சி., பள்ளியில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, வேனில் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே அரசலங்குடி- எடுத்துக்கட்டி சாத்தனுார் சாலையில் வந்தபோது, மாங்குடி என்ற இடத்தில் குடிபோதையில் நின்றிருந்த சில வாலிபர்கள், பள்ளி வாகனத்தை வழிமறித்து கற்களை வீசி தாக்கினர். இதனால் பயந்து போன குழந்தைகள் அச்சத்தில் அலறினர். குழந்தைகள் அலறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பள்ளி நிர்வாகம் பொறையார் போலீசில் புகார் அளித்தது. மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவில், பொறையார் போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, பூதனுார் தாமரைச்செல்வம், 25, என்பவரை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.