மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
11-Nov-2024
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே டூவீலரில் வந்த பள்ளி தலைமை ஆசிரியையிடம் செயின் பறித்த இருவரை மணல்மேடு போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்தவர் ஆலிஸ்மேரி.52. மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் ஊரில் இருந்து டூவீலரில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். அதுபோல கடந்த நவ.,11ம் தேதி தனது தங்கை மகனுடன் டூவீலரில் பள்ளிக்கு வந்த ஆலிஸ்மேரியை வழிமறித்த ஒரு கும்பல் மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது. இது குறித்த புகாரின் பேரில், மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் இருந்த செல்போன் சிக்னலை கொண்டு, சந்தேகத்தின் அடிப்படையில், சி.புலியூரை சேர்ந்த பழனி மகன் விவேகானந்தன்.28., புரசங்காடு கலியமூர்த்தி மகன் பிருதிவிராஜ்.22. ஆகிய இருவரையும் கைது செய்தனர்.விசாரணையில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய விவேகானந்தன் கடந்த சில நாட்களாக ஆலிஸ்மேரியை கண்காணித்து தனது சிறை நண்பர்களுடன் சேர்ந்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும், நகையைத் திருடி உடன் வந்த நண்பர்களிடம் கொடுத்து அனுப்பியதும் தெரியவந்தது.
11-Nov-2024