கைம்பெண்ணுக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவு
நாமக்கல்:நாமக்கல், இ.பி., காலனியைச் சேர்ந்தவர் உமாராணி, 45. இவரது கணவர் தேவராஜன். இவர், 37,613 ரூபாய், ஆண்டு பிரீமியம் தொகை செலுத்தி, 'டாடா' ஏ.ஐ.ஏ., இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 75 லட்சம் ரூபாய்க்கு, 40 ஆண்டு பாலிசி எடுத்தார்.கொரோனா தொற்றால், 2020 அக்., மாதத்தில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் தேவராஜன் இறந்தார். கணவரின் இறப்பு குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரிவித்து, காப்பீடு தொகை, 75 லட்சம் ரூபாய் கோரி, ஆவணங்களை சமர்ப்பித்தார்.'தேவராஜனுக்கு, இருதய நோய், சர்க்கரை நோய் இருந்துள்ளது. அதை மறைத்து பாலிசி பெற்றுள்ளார். இழப்பீடு வழங்க முடியாது' என, நிறுவனம், 2023 மார்ச்சில் அப்பெண்ணுக்கு தெரிவித்தது.அதிர்ச்சியடைந்த அப்பெண், நீதிமன்றத்தில், 2023 மே மாதத்தில் வழக்கு தொடுத்தார். விசாரணை முடிந்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.'இன்சூரன்ஸ் தொகையை வழங்க மறுத்தது, நிறுவனத்தின் சேவை குறைபாடு. அவருக்கு ஏற்கனவே இருதய நோய், சர்க்கரை நோய் இருந்ததை நிரூபிக்க, நிறுவனம் போதிய சாட்சியம், ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.'எனவே, கொரோனா தொற்றால் கணவனை இழந்த உமாராணிக்கு, நான்கு வாரத்துக்குள் இன்சூரன்ஸ் தொகை, 75 லட்சம் ரூபாய், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் என, 80 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.