நாமக்கல்: தமிழகம், கேரளாவில் ஏறுமுகத்தில் இருந்த முட்டை கொள்முதல் விலை, ஒரே நாளில், 20 காசு சரிந்து, 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி, 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த, 1ல் கொள்முதல் விலை, 535 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து, படிப்படியாக சரிந்து, 10ல், 480 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 11ல் ஒரே நாளில், 60 காசு அதிகரித்து, 540 காசாக கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாட்கள், 15 காசு உயர்ந்த நிலையில், நேற்று அதிரடியாக, 20 காசு குறைக்கப்பட்டு, 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏறுமுகத்தில் இருந்த கொள்முதல் விலை, திடீரென சரிந்ததால், பண்ணையாளர்கள் கவலையடைந்தனர். நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 600, ஐதராபாத், 530, விஜயவாடா, 530, பர்வாலா, 435, மும்பை, 600, மைசூரு, 597, பெங்களூரு, 595, கோல்கட்டா, 540, டில்லி, 500 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி கிலோ, 97 ரூபாய், கறிக்கோழி கிலோ, 138 ரூபாய் என, பழைய விலை நிர்ணயம் செய்யப்பட்டது.