நாமக்கல் : நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகள், 93.49 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 10ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.தமிழகத்தில், கடந்த மார்ச், 1ல் துவங்கி, 22ல் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், 89 அரசு பள்ளிகளை சேர்ந்த மொத்தம், 8,309 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அதில், 7,776 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.58 சதவீதமாகும்.அதேபோல், ஒரு ஆதி திராவிட நல பள்ளியில் தேர்வு எழுதிய, 96 பேரில், 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 87.50 சதவீதம். மேலும், 4 பழங்குடியினர் நல பள்ளிகளை சேர்ந்த, 214 பேரில், 198 பேர் வெற்றி பெற்று, 92.52 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சமூக நலத்துறை பள்ளியில், தேர்வு எழுதிய, 3 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 100 சதவீதம் தேர்ச்சி. 6 அரசு உதவி பெறும் பள்ளிகளில், தேர்வு எழுதிய, 559 பேரில், 545 பேர் வெற்றி பெற்று, 97.49 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், அரசு, ஆதிதிராவிடர், சமூக நலத்துறை, ஜி.டி.ஆர்., என, மொத்தம், 95 அரசு பள்ளிகளை சேர்ந்த, 3,915 மாணவர், 4,707 மாணவியர் என, மொத்தம், 8,622 பேர் தேர்வு எழுதினர். அவர்களில், 3,565 மாணவர்கள், 4,496 மாணவியர் என, மொத்தம், 8,061 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், 93.49. ஒட்டு மொத்தமாக, நாமக்கல் மாவட்டம், அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில், 10ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.