| ADDED : டிச 05, 2025 10:20 AM
ப.வேலுார்: ஜேடர்பாளையத்தில், தென்னை மரங்கள், கரும்புகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த பிலிக்கல்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ், 45, விவசாயி. இவர், 1.5 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மனைவி சரஸ்வதி, 50, விவசாயி. இவரது தோட்டத்தில் கரும்பு பயிர் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, அவர்களது தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள், 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், கரும்பு பயிர்களை வெட்டி சாய்த்துள்ளனர்.டி.எஸ்.பி., சங்கீதா, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். ஜேடர்பாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.கடந்த, 2023ல் ஜேடர்பாளையத்தை சேர்ந்த விவேகானந்தன் மனைவி நித்யா, 28. இவர் கடந்த 2023 மார்ச், 11-ல் ஆடு மேய்க்க சென்ற போது பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அப்போது அப்பகுதியில் தென்னை, வாழை, கரும்பு பயிர்கள் மேலும் பல்வேறு தீ வைப்பு மர்ம நபர்களால் நடந்தன. அப்போது, 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பியது. தற்போது மீண்டும், அப்பகுதியில் மரங்களை வெட்டி சாய்க்கும் சம்பவம் நடந்ததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.