ப.வேலுார் : ப.வேலுார் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் மரவள்ளி பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை, வியாபாரிகள் வாங்கிச்சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு விற்கின்றனர்.அங்கு, மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாரிக்கின்றனர். மேலும், 'சிப்ஸ்' தயார் செய்யவும், சிறு வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.கடந்த வாரம், மரவள்ளி கிழங்கு டன், 11,000 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாய் குறைந்து, தற்போது, 10,000 ரூபாய்க்கு விற்கிறது. இதேபோல், 'சிப்ஸ்' மரவள்ளி கிழங்கு டன், 12,000 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாய் குறைந்து, 11,000 ரூபாய்க்கு விற்கிறது. இந்த விலை குறைவால் மரவள்ளி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.